வெள்ளி, 19 செப்டம்பர், 2008

கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா!

இன்றைய அரசியல் தலைவர்களுக்காகத்தான் இந்தத் தலைப்பு.

இது எனது கேள்வியும் கூட.

மூதறிஞர் ராஜாஜி, தந்தை பெரியார் இவர்களுக்கிடையேயான ஆழமான நட்பு பற்றி நிறைய படித்துள்ளேன். பெருந்தலைவர் காமராஜர், அறிஞர் அண்ணா இவர்கள் இருவருக்கும், அரசியல் வாழ்க்கையைத் தாண்டி, ஒருவர் மீது ஒருவருக்கு பரஸ்பர மதிப்பும் மரியாதையும் இருந்தது.

ஆனால், இன்றோ வயதுக்கு மரியாதை தராமல் பெயர் சொல்லி தரக்குறைவாக விமர்சனம் செய்வதும், மூத்த தலைவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை பொது மேடையில் அசிங்கப்படுத்துவதும் சர்வ சாதாரனமாக போய்விட்டது.

நேற்றைய தினமலர் நாளிதழில் படத்துடன் ஒரு செய்தியைப் பார்த்தேன். நடிகர் சத்தியராஜின் மகன் சிபியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நமது உள்ளாட்சித்துறை அமைச்சர் மாண்புமிகு ஸ்டாலின் அவர்களும், அதிமுக எம்.எல்.ஏ. வும் , நடிகருமான திரு எஸ்.வி. சேகரும் மிகவும் நெருக்கமுடன் கட்டித் தழுவியபடி மலர்ந்த முகத்தோடு இருந்த அந்தப் படத்தை பார்த்த போதுதான், இடையே காணாமல் போயிருந்த அந்த அரசியல் வாழ்க்கையை மீறிய நட்பு, இன்றைய தலைமுறை அரசியல்வாதிகளான இவர்களுக்குள் துளிர்விடுவதை காண முடிந்தது!

இன்னும் சொல்லப் போனால், இன்றைய முதல்வர் மாண்புமிகு கலைஞர் கருணாநிதி அவர்களின் மேல் அன்றைய முதல்வர் திரு எம்ஜியார் அவர்கள் வைத்திருந்த ஆழமான நாற்பது ஆண்டு கால நட்பு பற்றி நம் எல்லோருமே அறிவோம்! தனது கடைசி காலத்தில், தான் உருவாக்கிய கட்சியை மீண்டும் திமுகவுடன் இணைத்துவிட அவர் மிகவும் விருப்பப் பட்டார் என்பதிலிருந்தே, அவர் எந்த அளவு கலைஞரை நேசித்திருக்க வேண்டும் என்பது புரிகிறதல்லவா.

அரசியல் வேண்டும்தான். ஆனால் அதுவே காழ்புனற்சியாக மாறிவிடக் கூடாது. தனி ஒருவரைத் துதி பாடுவதோ அல்லது ஒருவரின் அரசியலுக்கு அப்பாற்பட்ட தனிப்பட்ட வாழ்கையைப் பற்றி விமர்சனம் செய்வதோ கூடாது.

தமிழ்ச் சமுதாயம் முன்னேற வேண்டுமானால், அரசியல் நாகரீகம் நிச்சயம் தேவை. இன்றைய தலைவர்கள் திருந்துவார்களா?

எல்லோரும் ராஜாஜி, காமராஜர் ஆக முடியுமா? கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா?

ஆம். கல்லெல்லாம் மாணிக்க கல்லாகவே இருக்கட்டும். நல்லதையே நினைப்போம். நல்லதே நடக்கும்!

அன்புடன்,

கண்ண நேசன்.

நன்னிலம்.

1 கருத்து:

swathi சொன்னது…

thank u very much for ur comments:)