வியாழன், 18 செப்டம்பர், 2008

எழுதுவதென்பது ஒரு தனி சுகம்!

பேசுவதைக் காட்டிலும் எழுதுவதென்பது எப்போதுமே எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. எனக்குத் தெரிந்து, எனது பத்தாம் வகுப்பு விடுமுறையின் போது கவிஞர் கண்ணதாசனின் கவிதைகளில் மிகவும் பைத்தியமானேன்.

அந்த இரண்டு மாத கால விடுமுறையில், கவிஞரின் "எனது வசந்த காலங்கள்" முதற்கொண்டு "அர்த்தமுள்ள இந்துமதம்" வரை அனைத்து படைப்புகளையும் படித்து முடித்தேன். விளைவு! "கண்டது கற்கப் பண்டிதனானேன்!

தமிழன்னையின் மடியில் நானும் ஒரு கவிஞனாகப் பிறந்தேன். எனது முதல் கவிதையை நான் எழுதி முடிதபோது, அடடா... அந்த சுகத்தை என்ன சொல்ல !
அதை இப்போது வார்த்தைகளில் வர்ணிக்க முடியாது!

மீன் குஞ்சுக்கு நீந்தக் கற்றுக் கொடுக்க வேண்டுமா என்ன? ஆம்! எனது தாயும், தந்தையுமே தமிழாசிரியர்கள்தானே. தமிழ் எனக்குக் கவிதையாக வந்ததில் எனது பாரம்பர்யமும் ஒரு காரணம்!

வட மொழியிலும் ஒரு பாடல் எழுதியுள்ளேன். இத்தனைக்கும் எனக்கு சம்ஸ்க்ருதம் தெரியாது. கேள்வி ஞானம் என்பார்களே அதுதான். என் வீடடுக்கு எதிர் வீட்டில் ஸ்ரீ. சேதுராம தீக்ஷிதர் என்ற ஒரு சம்ஸ்க்ருத பண்டிதர் இருந்தார். அவர் மற்றவர்களுக்கு சொல்லித் தருவதை நான் எனது வீட்டுத் திண்ணையில் இருந்தபடியே கேட்டுக் கொண்டிருப்பேன். சம்ஸ்க்ருதம் எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு மொழியாகும்.

எனது சுய சரிதத்தை பிறகு சொல்கிறேன். எனது வாழ்க்கை நிறைய அனுபவங்களை கொண்ட ஒரு அருமையான புத்தகமாகும்.

இனி, தினமும் உங்களுடன் என் மனதில் பட்ட விஷயங்களைப் பற்றி பகிர்ந்து கொள்ளப் போகின்றேன்.

அன்புடன்,
கண்ண நேசன்,
நன்னிலம்.




கருத்துகள் இல்லை: