புதன், 17 செப்டம்பர், 2008

இதுதான் எனது தர்பார் மண்டபம்!

வணக்கம்! வாழிய நலம்!

கண்ண நேசனாகிய நான், இந்த எனது வலைப் பதிவின் மூலம், உங்கள் அனைவருக்கும் சொல்லும் முதல் வணக்கம்!

இயந்திர மயமான இன்றைய வாழ்க்கை முறையில், ஒவ்வொரு மனித மனதுக்குள்ளாகவும் எத்தனை எத்தனையோ பாரங்கள்...பாதிப்புகள்... எத்தனை எத்தனையோ சந்தோஷங்கள்... மகிழ்ச்சி ஆரவாரங்கள்...

சந்தோஷங்களைக் கொண்டாடுகிற மனித மனம், சுமைகளில் சுருங்கிப் போகிறது. ஆம்! சுமைகளும், துக்கமும்தான் மனிதனை மிக அதிகமாகப் பாதிக்கின்றன... பாடமும் கற்பிக்கின்றன!

இவைகளில், மனிதன் தானாக ஏற்படுத்திக் கொள்ளும் சுமைகளைக் காட்டிலும், அவனைச் சுற்றியுள்ள சூழ்நிலைகளால் அவனுக்கு ஏற்படும் பாதிப்புகளே மிகவும் அதிகம்.

பாதிப்புகளும்... அவற்றால் ஏற்படும் பாரங்களும் நமது அன்றாட வாழ்க்கையிலேதான் அரங்கேறுகின்றன.

நட்புடன் பழகியபடியே நமக்கும் தெரியாமல் நாரத வேலை செய்யும் நயவஞ்சகர்களையும்...

அன்பு காட்டிஆதரிப்பது போல் அரவணைத்து, அன்பின் ஆணிவேரையே அறுக்கத் திட்டமிடும் அரக்க மனத்தவர்களையும்...

பொது நலமே தன் வாழ்கை என்று பொழுதெல்லாம் உழைப்பது போல் போக்கு காட்டி, எதுவெல்லாம் கைப்பற்ற ஏதுவாக இருக்கிறதோ அதுவெல்லாம் கைப்பற்றி... களவாடி... தனக்குத் தனக்கென்று சுயநலம் ஒன்றையே தன் சுய ரூபமாகக் கொண்டு சொந்தத் தாய் நாட்டையே சுரண்ட எத்தனிப்பவர்களையும்...

மண்டை பிளக்க மதவாதம் பேசி, சண்டை மூட்டிவிட்டு சாந்தம் அதை உருக்குலைத்து, கந்தக வெடிச் சத்தத்தால் கருகிய மனித நேயத்தின் சாம்பல் குவியல்களில் சந்தோஷிக்கும் சாடிச மிருகங்களையும்...

தினம் தினம்... ஏதோ ஒரு நிகழ்வின் வாயிலாக நாம் பார்த்தும்... கேட்டும்...படித்தும் கொண்டுள்ளோம்...

சமுதாய உணர்வுள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் இவை குறித்த தனது சுய மதிப்பீடுகளை... கருத்துக்களை எடுத்தியம்ப வேண்டுமென்ற ஆர்வம் நிச்சயமாக இருக்கும்.

அந்த வகையில், பொறுப்புணர்வுள்ள ஒரு இந்தியப் பிரஜையாக... இந்த வலைப் பதிவில் எனது எண்ணங்களை உங்களுடன் நான் பகிர்ந்து கொள்ளப் போகின்றேன்.

இந்த வலைப் பதிவு, எனது பரந்து விரிந்த சாம்ராஜ்ஜியத்தின் படோடாபம் மிகுந்து காணப்படும் பளிங்கு தர்பார் மண்டபம் ஆகும்!

அன்றாட நிகழ்வில் தொடங்கி... கலை, கவிதை, அரசியல், சினிமா, விளையாட்டு, ஆன்மிகம், பகுத்தறிவு வாதம், இயற்கை சீற்றங்கள் என எதுவெல்லாம் என் எண்ணங்களை எழுதத் தூண்டுகிறதோ... அத்தனை பற்றியும் எழுதப் போகிறேன்.

நாளைய தர்பாரில் சந்திக்கலாம்...

அன்புடன்,

கண்ண நேசன்.

நன்னிலம்.


கருத்துகள் இல்லை: